2024 – 2025 கல்வியாண்டில் சி.பி.எஸ்.சி மற்றும் ஐ.சி.எஸ்.இ உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளிலும் பயின்று வரும் மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தை கட்டாயமாக எழுத வேண்டும் என தனியார் பள்ளிகள் இயக்குனர் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழ் பாடம் கட்டாயம்
அனைத்து பள்ளிகளிலும் தமிழ் பாடத்தை கட்டாய பாடமாக்க வேண்டும் என தமிழக அரசு கடந்த 2006 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால், தனியார் பள்ளிகள் தமிழை கட்டாய பாடமாக்க மறுத்து, காலம் தாழ்த்தி வந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒன்றாம் வகுப்பு முதல் அனைத்து தனியார் பள்ளிகளிலும் தமிழை கட்டாய பாடமாக்கி மீண்டும் அரசு உத்தரவிட்டு இருந்தது. மேலும் இதுகுறித்து 2015 ஆம் ஆண்டு ஒன்றாம் வகுப்பு சேரும் மாணவர்கள் ஆண்டு ரீதியாக தமிழ் பாடத்தை கற்று வரவேண்டும் என்கிற ரீதியில் அந்த உத்தரவானது வெளியிடப்பட்டது
தனியார் பள்ளிகளுக்கு உத்தரவு
இந்த நிலையில், மாணவர்கள் பத்தாம் வகுப்பை எட்டி உள்ள நிலையில் இந்த ஆண்டு கண்டிப்பாக பொதுத் தேர்வில் அனைத்து தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழ் பாடத்தை எழுத வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் நாகராஜன் வெளியிட்டிருக்கும் உத்தரவில், சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ் கல்வி முறையில் படிக்கும் மாணவர்கள் உட்பட அனைத்து தனியார் பள்ளிகளிலும் தமிழ் பாடம் கற்பிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இதற்காக தனியார் பள்ளிகள் முறையான பாடத்திட்டத்தை தயார் செய்து ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2023 – 2024 சி.பி.எஸ்.சி மற்றும் ஐ.சி.எஸ்.இ உள்ளிட்ட அனைத்து வகை கல்வி முறையிலும் பயின்று வரும் மாணவர்களும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும்.