IPL 2024: இந்தியன் பிரீமியர் லீக் என்பது இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட் திருவிழா ஆகும். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும் இந்த போட்டிகள் பிசிசிஐக்கு அதிக வருமானத்தை கொட்டும் ஒரு போட்டியாக இருந்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் போட்டிகளுக்கான எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்து வருகிறது. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் அணியில் இடம் பிடிக்க கடும் முயற்சி செய்து வருகின்றனர். சில சர்வதேச போட்டிகளை விட்டுவிட்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாடுகின்றனர். காரணம் இங்கு அவர்களுக்கு கிடைக்கும் மதிப்பு மற்றும் பணம் தான். ஒரு வருடம் முழுவதும் அவர்களது நாட்டிற்காக விளையாடினாலும் கிடைக்காத வருமானம் ஒரு ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாடினால் கிடைத்துவிடும்.
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் மார்ச் 22ம் தேதி தொடங்குகிறது. மக்களவைத் தேர்தல் காரணமாக முதல் 21 போட்டிகளின் அட்டவணையை மட்டுமே பிசிசிஐ வெளியிட்டுள்ளது. தேர்தல் முடிந்த பிறகு மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்படும் என்று முன்னர் கூறி இருந்தது. ஆனால், தற்போது தேர்தல் காரணமாக மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் துபாயில் நடைபெறலாம் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு டி20 உலக கோப்பை நடைபெற உள்ளதால் தேர்தலுக்காக காத்திருந்தால் வீரர்கள் அதற்காக தயார் ஆக முடியாது என்பதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக துபாயில் இரண்டாவது பாதி ஐபிஎல் நடத்த வாய்ப்பு உள்ளது என்று தற்போது வெளியான தகவல் கூறுகிறது. ‘இந்திய தேர்தல் ஆணையம் சனிக்கிழமை இன்று மாலை 3 மணிக்கு தேர்தல் அட்டவணையை அறிவிக்க உள்ளது. அதன் பிறகு, ஐபிஎல் துபாய்க்கு மாற்றப்பட வேண்டுமா இல்லையா என்பதை பிசிசிஐ முடிவு செய்யும். தற்போது, ஐபிஎல் இரண்டாம் பாகத்தை துபாயில் நடத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய சில பிசிசிஐ உயர் அதிகாரிகள் துபாயில் உள்ளனர்’ என்று பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகின்றன.
மேலும் சில ஐபிஎல் அணிகள் தங்கள் அணி வீரர்களிடம் பாஸ்போர்ட்டை வாங்கி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 2014 ஐபிஎல் முதல் பகுதி தேர்தல் காரணமாக துபாயில் அதாவது ஐக்கிய அரபு அமீரகத்திலும் நடைபெற்றது. ஐபிஎல் 2024 போட்டிகளுக்கான முதல் 21 போட்டிகள் கொண்ட அட்டவணையை பிசிசிஐ அறிவித்துள்ளது. ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மார்ச் 22-ம் தேதி சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு விளையாடுகின்றன. இந்த அட்டவணையின் இறுதிப் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஏப்ரல் 7 ஆம் தேதி லக்னோவில் நடைபெறுகின்றன. கடைசியாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐபிஎல் 2021 போட்டிகள் நடைபெற்றது. மேலும், ஐபிஎல் 2020 சீசன் முழுவதும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றது. இந்தியாவில் கோவிட் தொற்றுநோய் காரணமாக, ஐபிஎல் அங்கு மாற்றப்பட்டது.