POCSO Act Against Former CM BS Yediyurappa: பெங்களூரு சதாசிவநகர் காவல்நிலையத்தில் கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது 17 வயது சிறுமியின் தாய் ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தனது மகளை கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி எடியூரப்பா பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியதாக தெரிவித்துள்ளார். மோசடி வழக்கு தொடர்பாக எடியூரப்பாவை சந்திக்க சென்ற போது இந்த சம்பவம் நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எஃப்ஐஆரில் பதிவான தகவலின்படி, உதவி கேட்டு சென்ற சிறுமியை தனது அறைக்கு தனியாக எடியூரப்பா அழைத்துச்சென்றாராம். இந்த பகிரங்க குற்றச்சாட்டு குறித்து பேசியுள்ள எடியூரப்பா, இந்த பாலியல் புகார் லோக்சபா தேர்தல் வரும் சமயத்தில் வேண்டுமென்றே ஜோடிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார். மேலும், மோசடி வழக்கில் உதவி கேட்டு வந்த தாய்க்கும் மகளுக்கும் தான் பண உதவி செய்ததாகவும், அப்போது அவர் சரியாக தன்னிடம் பேசவில்லை என்றும், மன ரீதியாக அந்த பெண்ணுக்கு பிரச்சனை இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
53 பேர் மீது புகார்
அடிப்படை ஆதாரமற்ற இந்த வழக்கு, வேண்டுமென்றே எடியூரப்பாவுக்கு கலங்கம் ஏற்படுத்த போடப்பட்டது என அவரது அலுவலகத்தில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 81 வயதான எடியூரப்பா மீது புகார் கொடுத்த பெண் இதற்கு முன்பு 53 பேர் மீது வெவ்வேறு விதமான வழக்குகளை அளித்துள்ளதாகவும் ஒரு தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கு மிகவும் சென்சிடீவ் என்பதால், வழக்கின் விசாரணை முடிந்து அறிக்கை வரும் வரை எந்த கருத்தும் சொல்ல முடியாது என கர்நாடக மாநிலத்தின் உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா தெரிவித்துள்ளார். மேலும், இது அரசியலுக்காக ஜோடிக்கப்பட்ட வழக்கு அல்ல என்றும், அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே எஃப்ஐஆர் பதியப்பட்டுள்ளது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். தேர்தல் நேரத்தில் பாஜகவின் மூத்த தலைவரான எடியூரப்பா மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு எழுந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கடும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
சிஐடிக்கு மாற்றம்
போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளதால் இந்த விவாகாரம் சிஐடி விசாரணைக்கு மாற்றி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடக டிஜிபி அலோக் மோகன் இந்த உத்தரவை அளித்துள்ளார். எடியூரப்பா 2007ஆம் ஆண்டில் எழு நாள் முதலமைச்சராக இருந்த நிலையில், அடுத்து 2008ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக இருந்தார். தொடர்ந்து, 2018இல் 6 நாள்கள் மட்டும் முதலமைச்சராக இருந்த எடியூரப்பாவின் ஆட்சி கலைக்கப்பட்ட பின்னர் 2019ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக இருந்தார்.