IPL 2024 CSK New Captain Ruturaj Gaikwad : இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் (IPL 2024) கோலாகலமான தொடக்க விழாவோடு நாளை (மார்ச் 22) தொடங்க இருக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடக்க விழா நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏ.ஆர். ரஹ்மான், சோனு நிகம் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகளும், பாலிவுட் நடிகர்கள் அக்சய் குமார், சோனு நிகம் ஆகியோரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்க விழாவுக்கு பின்னர், இரவு 8 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறும். இந்த போட்டியின் மிட் இன்னிங்ஸில் DJ Axwell-இன் இசை நிகழ்ச்சியும் பார்வையாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடக்க விழாவில் கண்கவர் வாணவேடிக்கை மற்றும் லைட் ஷோக்கள் இடம்பெறும் என தெரிகிறது.
சிஎஸ்கே அணியின் புதிய கேப்டன்
இவை ஒருபுறம் இருக்க, 10 அணிகளின் கேப்டன்களும் தொடக்க விழாவுக்காக சென்னை வந்துள்ளனர். நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ஐபிஎல் கோப்பையை தொடக்க விழாவின் மேடைக்கு எடுத்து வருவார். அந்த வகையில், கேப்டனாக தோனிதான் ஐபிஎல் கோப்பையை எடுத்து வருவார் என அனைவரும் எதிர்பார்த்து வந்த சூழலில், ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad) கோப்பையை மேடைக்கு எடுத்து வருவார் என அதிர்ச்சிக்கர தகவல் ரசிகர்களின் மனதில் இடியாய் இறங்கியுள்ளது.
ஐபிஎல் நிர்வாகம் அதன் அதிகாரப்பூர்வ X பக்கத்தில் ஐபிஎல் கோப்பையுடன் கேப்டன்கள் வழக்கமாக போஸ் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தது. அங்குதான் பலருக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அதாவது, சிஎஸ்கே கேப்டனாக அந்த புகைப்படத்தில் ருதுராஜ் கெய்க்வாட் இடம்பெற்றிருந்தார். மேலும் அந்த பதிவில்,”ஐபிஎல் அணிகளின் 9 கேப்டன்களும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் துணை கேப்டன் ஜித்தேஷ் சர்மாவும்…” என குறிப்பிட்டிருந்ததே, ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை உறுதிப்படுத்தியது எனலாம்.
சில நாள்களுக்கு முன் தோனி ‘New Season New Role’ என பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். அந்த பதிவை தற்போது உண்மையாக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக இல்லாமல் புதிய ரோலை விளையாட தோனி தயாராகி இருக்கிறார் என்ற கூற வேண்டும். குறிப்பாக, தோனிக்கு கடந்தாண்டு கால் முட்டியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
Impact Player தோனி?
இதனால், அவர் விக்கெட் கீப்பிங் செய்ய இயலாது என கூறப்பட்டது. எனவே, தோனியால் பேட்டிங் மட்டுமே செய்ய முடியும் என கூறப்பட்டது. Impact Player ஆக தோனி களமிறங்க வேண்டும் என்றால் அவர் கேப்டனாக இறங்க முடியாது. அதாவது, ஐபிஎல் விதியின்படி கேப்டனாக இருப்பவர் Impact Player ஆக களமிறங்க இயலாது. எனவே, தோனி பேட்டிங் மட்டும் செய்வதற்காக இந்த முடிவை எடுத்திருக்கலாம் என ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.
ஆனால், தோனியின் சிறப்பம்சம் என்பது பேட்டிங் மட்டுமில்லை, களத்தில் அவரின் செயல்பாடுகளே அவரை மிகச்சிறந்த வீரராக மாற்றியிருக்கிறது. ஒருவேளை இதுதான் தோனியின் கடைசி சீசன் என்றால் தோனி களத்தில் விக்கெட் கீப்பிங் செய்வதையும், பீல்டிங் செட் செய்வதையும் பார்க்கவே கோடாணகோடி ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
களத்தில் தோனி?
எனவே, அவர் Impact Player ஆக களமிறங்குவதற்கு இந்த முடிவை எடுத்திருக்க மாட்டார் என்றும், சிஎஸ்கே அணியின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டும், தான் விளையாடும்போதே ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு துணையாக இருக்க வேண்டும் என்பதை கருத்தில்கொண்டும் தான் தோனி இந்த முடிவை எடுத்திருப்பார் என மற்றொரு தரப்பு கூறுகின்றனர்.
அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஏலத்தில் அவனிஷ் ஆரவல்லி என்ற இளம் விக்கெட் கீப்பிங் பேட்டரை சிஎஸ்கே எடுத்தது. எனவே, அவனிஷ் இந்தாண்டோ அல்லது அடுத்த ஆண்டோ சிஎஸ்கேவின் பிரதான விக்கெட் கீப்பராக செயல்பட வாய்ப்புள்ளது. மற்றொரு விக்கெட் கீப்பிங் பேட்டரான டெவான் கான்வே காயம் காரணமாக முதற்கட்ட தொடரில் இருந்து விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது.