பழைய நிலைக்கு திரும்பியதா சென்னை?
சென்னையில் புறநகர் ரயில்கள் இன்றும் ரத்து.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை வரலாறு காணாத வகையில் சிரமங்களை எதிர்கொண்டு வருகிறது. பல இடங்களில் இன்னும் தண்ணீர் தேங்கி உள்ளது. சென்னை சோழிங்கநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் மக்கள் பயணம் மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். OMR சாலையில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் தங்கும் விடுதிகளில் கழுத்தளவு தண்ணீர் தேங்கியுள்ளதால் அனைவரும் தங்கும் விடுதியை விட்டு வெளியேறி அவர்களது சொந்த ஊர்களுக்கும், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு செல்வதற்காக உடமைகளை எடுத்துகொண்டு பேருந்திற்காக பல மணி நேரம் காத்துக் கிடக்கின்றனர்.
அதேபோல் ஐடி நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் மழைநீர் சூந்துள்ளதால் தனியார் தங்கும் விடுதியில் இருந்து படகு மூலம் பாதுகாப்பாக வெளியேறி அவர்களது சொந்த ஊர்களுக்கு, சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்காக சோழிங்கநல்லூரில் காத்து கிடக்கின்றனர். அதேபோல் பீகார், அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கட்டிட தொழிலாளிகள், பெயிண்ட்கள் என நூற்றுக்கணக்கான மக்கள் மூட்டை முடிச்சி கட்டிகொண்டு அவர்களது சொந்த ஊருக்கு செல்கின்றனர்.
பொது விடுமுறை
பொது விடுமுறை விட்ட நிலையில் வாடகை வீடு மற்றும் தங்கும் விடுதிகளில் வசித்து வந்த கல்லூரி மாணவ, மாணவிகள், ஐடி ஊழியர்கள், வெளிமாநில கட்டிட தொழிலாளிகள் என ஆயிரக்கணக்கானோர் உடமைகளை எடுத்துக் கொண்டு வெளியேறி வருவதால் சென்னை சோழிங்கநல்லூர் மக்கள் தலைகளாகவே காட்சியளிக்கிறது. மேலும் கல்லூரி மாணவர்கள், ஐடி ஊழியர்கள் இந்த பகுதி இயல்பு நிலைக்கு திரும்பினால் மட்டுமே மீண்டும் வருவோம் என்று கூறினார்.
ரயில் சேவை
இருப்புப் பாதையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையேயான அனைத்து மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, சென்ட்ரல் – அரக்கோணம் செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே கூறி உள்ளது. சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம், செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் சென்னையில் எழும்பூரில் இருந்து மட்டுமே புறப்பட்டு, மீண்டும் எழும்பூர் வந்தடையும். இந்த மார்க்கத்தில் 30 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது. சென்னை கடற்கரை – திருவள்ளூர், அரக்கோணம் இடையே மற்றும் சிந்தாதிரிப்பேட்டை – வேளச்சேரி இடையேயும் 30 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது திருவொற்றியூர் – கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது.
நிவாரணப் பொருட்கள்
கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் லாரி மூலம் நிவாரப் பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்து இதில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் தன்னார்வுகள் உதவியுடன் அரிசி, பருப்பு, தண்ணீர் பாட்டில்கள் நாப்கின் உட்பட அத்தியாவசியமான அந்தந்த தாலுகாவில் பெறப்பட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு நிவாரண பொருட்கள் அனைத்தும் லாரிகளில் ஏற்றப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இப்பணியை கலெக்டர் கிராந்தி குமார் நேரில் பார்வையிட்டு அனுப்பி வைத்தார்.