சமத்துவமின்மைக்கு நோ சொல்லு.
உருவக்கேலிக்கு நோ சொல்லு.
மூட நம்பிக்கைக்கு நோ சொல்லு.
சென்னை: பிறப்பினால் அனைவரும் சமம் என்பது சத்தியமான உண்மையாக இருந்தாலும், ஏற்றத்தாழ்வு, குறைத்து மதிப்பிடப்படும் பெண்கள் என சமத்துவமின்மை உலகம் முழுவதும் விரவிக்கிடக்கிறது. பிறப்பில் ஏற்றத்தாழ்வு கொள்ளக்கூடாது, பிறப்பால் உணவு, உடை, இருப்பிடம், கல்வி , வேலை வாய்ப்பு என அடிப்படை உரிமைகள் எதுவும் மறுக்கப்படக்கூடாது என்ற பொது நியதியை நிதர்சனமாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். அடிப்படை உரிமைகள், அத்தியாவசியத் தேவைகள் என்பது அனைவருக்கும், அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பது சமூக நீதி.
தமிழ்நாட்டில் சமூக நீதி தொடர்பான விழிப்புணர்வு என்பது நாட்டின் பிற மாநிலங்களை விட அதிகமாக உள்ளது என்பதற்கு, கல்வியறிவு சதவிகிதம் உறுதிப்படுத்துகிறது. திராவிட மாடல் அரசு என்று பலரும் தமிழ்நாட்டு அரசை அழைக்கும் நேரத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், இரு ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது 2021 அக்டோபர் 23 அன்று, சுப. வீரபாண்டியன் தலைமையில் சமூக நீதி கண்காணிப்புக் குழுவை அமைத்தார்.
இந்தக் குழு அமைத்தன் நோக்கம், கல்வி, வேலைவாய்ப்பு, அரசு பதவி நியமனங்கள், பதவி உயர்வுகள், மகளிர் உரிமை, பெண்களுக்குச் சமூகப் பங்களிப்பில் அதிகாரமளித்தல் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல் முறையாக முழுமையாக நடைமுறைப்படுவதை கண்காணித்து தமிழ்நாடு அரசுக்கு தேவையான பரிந்துரைகள் செய்யவதாகும்.
அந்த வகையில், பள்ளி மாணவர்களிடையே சாதியவாதத்திற்கு எதிரான மனநிலையை ஏற்படுத்தி சமூக நீதியை புகட்டும் வகையிலான புதிய புத்தகம் ஒன்றை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை தற்போது அறிமுகம் செய்து இருக்கிறது.
தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தால் வழங்கப்படும் பள்ளி மாணவர்களுக்கான பாடபுத்தகங்களில் சாதிய தீண்டாமைகளுக்கு எதிரான வாசகங்கள் இடம் பெறுவது வழக்கம். தற்போது, அரசு பள்ளி மாணவர்கள் மத்தியில் சாதி, நிற ஏற்றத்தாழ்வுகளை போக்கும் விதமாக தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை புதிய புத்தகம் ஒன்றை வெளியிட்டு உள்ளது.
எழுத்தாளர் ச.மாடசாமி எழுதிய “நோ சொல்லு” என்ற புத்தகம்தான் அது. அழகான கார்ட்டூன் படங்களுடன் மழலைகளுக்கு எதில் புரியும் வகையில், சாதி, நிற பாகுபாட்டுக்கு எதிராக எழுதப்பட்டுள்ள புத்தகம் (TN govt introduced book to against caste mentality) பலரின் பாராட்டுக்களையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கல்விக்கூடங்கள் என்பவை, மாணவர்கள் படிப்பதற்காக மட்டுமல்ல பிள்ளைகளைப் பாதுகாப்பதற்காகவும் தான் என்பதன் அடிப்படையில், அடிப்படை உரிமைகளையும் தீண்டாமையையும், சாதி மறுப்பையும் சொல்லும் புத்தகத்தை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை தற்போது அறிமுகம் செய்துள்ளது.
“வழியில் ஒருவன்! நில்! என்கிறான். சொல்! என்கிறான். “தம்பி! உன் சாதி என்ன?” நோ சொல்லு! பாரி! அவனுக்கு நோ சொல்லு!” என்பது போன்ற சிறிய ஆனால், மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் கருத்துக்களை எழுத்தாளர் தனது புத்தகத்தில், குழந்தைகளுக்கு சுலபமாக புரியும் வகையில் எழுதியுள்ளார்.
இதுபோன்ற ஆளுமையுள்ள சிறிய சொற்தொடர்களை குழந்தைகளை அடிக்கடி கேட்க வைக்கும்போது, அவை அவர்களின் மனதின் ஆழத்தில் வேராய் ஊன்றிவிடும் என்பதால் தமிழக அரசு இந்த முன்முயற்சியை எடுத்துள்ளது.
“அவ கறுப்பு! இவ அழுக்கு! விலக்கு! தள்ளி வை! இது பிரிக்கும் பேச்சு. நோ சொல்லு ராணி! நீ நோ சொல்லு!
பிரிக்கும் பேச்சுக்கு நோ சொல்லு!” என்று சொல்லி, உருவக்கேலி மற்றும் தோலின் நிறம் கொண்டு மனிதர்களை கீழ்மைப்படுத்தும் குணம் தவறு என்று மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் புத்தகத்தை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளதற்கு பாராட்டுகள் வந்து குவிகின்றன.
“மரத்தில் பேய்! வழியில் பேய்! போகாதே! போகாதே! இது வெட்டிக் கூச்சல்! நோ சொல்லு ராணி! முட்டாள் பேச்சுக்கு நீ நோ சொல்லு!” என்று கூறும் புத்தகத்தை எழுதிய திரு ச. மாடசாமி அவர்கள் அறிவொளி முன்னாள் ஒருங்கிணைப்பாளர். அவர் மாணவர்களுக்காகவும், குழந்தைகளின் இலக்கியத்துக்காகவும் சமூகத்தில் சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக அறியப்படுபவர்.