சென்னையில் தொடரும் கனமழை
தமிழகத்தை நோக்கி நகரும் புயல்
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
தென் கிழக்கு வங்க கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து வலுப்பெற்றுக் கொண்டே வருகிறது. இது புயலாக மாறக்கூடும் என எச்சரிக்கும் சென்னை வானிலை ஆய்வு மையம் வரும் 4 ஆம் தேதி சென்னை மற்றும் ஆந்திரா இடையே கரையைக் கடக்கும் என்று தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கன மழை மற்றும் சில இடங்களில் மிக கன மழையும் பெய்யவும் வாய்ப்பிருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
புயலாக மாறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தொடர்ந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் தமிழகத்தை நோக்கி நகர்கிறது. டிசம்பர் 3ம் தேதிவாக்கில் இது மேலும் தீவிரமடைந்து புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல ஆய்வுத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, டிசம்பர் 2ம் தேதி புயலாக மாறலாம் என்று கூறப்பட்டிருந்த நிலையில், இலங்கை கடல் பகுதியிலும் இதே நேரத்தில் மற்றொரு மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் ஒரு நாள் தாமதாக புயலாக மாறுகிறது. ஞாயிற்றுகிழமை புயலாக மாறி டிசம்பர் 4ம் தேதி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடல் பகுதியில் புயலாக நிலவக் கூடும். சென்னை-மசூலிப்பட்டினம் அருகே 4ம் தேதி மாலை இது கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது.
எனினும் இன்று காலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கன மழை இருக்காது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும், வட தமிழக கடலோரத்தில் உள்ள சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் நாகப்பட்டினம் மாவட்டத்திலும் ஆங்காங்கே மழை பெய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருக்கிறது. இதனால் மழைநீர் ஆங்காங்கே தேங்யிருப்பதால் மக்கள் சிக்கலை எதிர்கொண்டிருக்கின்றனர்.
வானிலை ஆய்வு மையத்தின் அலெர்ட்
டிசம்பர் 1ம் தேதியான இன்று தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் மஞ்சள் அலர்ட் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2ம் தேதி கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 3ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகதில் 33 செ.மீ மழை பதிவு
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியது முதல் தற்போது வரை 33 செ.மீ மழை பெய்துள்ளது. இது இயல்பான 35 செ.மீ மழையை விட 6% குறைவு. சென்னையில் இந்த பருவ மழைக் காலத்தில் இது வரை 59 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான அளவான 64 செ.மீ விட 8% குறைவாகும்.